Sunday, February 1, 2009

வீரத்தமிழன் முத்துக்குமரனுக்கு தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி

வீரத்தமிழன் முத்துக்குமரனுக்கு தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி


தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக பேரெழுச்சியை ஏற்படுத்திய ஈகி முத்துக்குமரனின் மாவட்டமான தூத்துக்குடியில் வீரவணக்க பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியிலுள்ள அனைத்து அமைப்புகளையும் , சங்கங்களையும் , கட்சிகளையும் தமிழுணர்வாளர்களையும் தூத்துக்குடி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் பா.பிரபாகரன் ஒருங்கிணைத்து தலைமையேற்று ஈகி முத்துக்குமரன் வீரவணக்க அமைதி பேரணியை நடத்தினார்.

பேரணிக்கு காவல் ஆய்வாளர்கள் மறுப்பு தெரிவித்த பொழுது மனம் தளராமல் தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தமிழரசன் காவல்துறையின் உயரதிகாரிகளை சந்தித்து பேரணிக்கான அனுமதியினை பெற்றார். இப்பேரணி ஏற்பாட்டினை ஆதித்தமிழர் பேரவை , புரட்சிகர இளைஞர் முன்னணி , தமிழ்நாடு மாணவர் கழகம் இணைந்து செய்திருந்தனர்.

தூத்துக்குடி பாலவிநாயகர் கோவில் முன்பு நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம் , குருசு பர்னாந்து சிலை , வடக்கு ரத வீதி வழியாக 6 மணியளவில் மாநகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. பின்னர் கலந்து கொண்ட அனைத்து அமைப்பினரும் தங்கள் வீரவணக்கத்தினை செலுத்தி ஈழத்தமிழர்களை பாதுகாக்கக்கோரி முழக்கமிட்டனர்.

இந்நிகழ்வில் ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் க.கண்ணன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் இரா.தமிழரசன் , அகில இந்திய மீனவர் சங்கத்தின் அன்டன் கோமசு , தமிழக-புதுவை மீனவர் கூட்டமைப்பின் ஜான் பி,இராயன் , கிருத்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் பணி.ஜார்ஜ் வில்பிரட் , அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சீனிவாசன் , இந்திய பொதுவுடைமைக்கட்சியின் மோகன்ராஜ் , தமிழ்நாடு வணிகர் சங்கபேரவையின் பொன் தனசேகரன் , புதிய தமிழக கட்சியின் லிங்கராஜ் , ஆதித்தமிழர் பேரவையின் இளைஞரணியினைச் சேர்ந்த மனோகரன் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெரியார் திராவிடர் கழக க.மதன் , அறிவுபித்தன் , நெல்லை சி.ஆ.காசிராசன் , மகாராசா, கோ.அ.குமார் , வெ.பால்ராசு , தமிழ்நாடு மாணவர் கழக அகரன் , தமிழர்தேசிய இயக்க தமிழ்மாறன் , தமிழ்நேயன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் சுஜித் , தமிழ்கனல் மற்றும் பலர் திரளாக கலந்துகொண்டனர்.

No comments: