Friday, December 19, 2008

ஈழத்தமிழர்களைக்காப்பாற்ற பிரணாப் முகர்ஜியை அனுப்பவதாக சொல்லிக்கொண்டு கிளிநொச்சியை பிடிக்க இராணுவ தளபதியை அனுப்பியது ஏன்? - தோழர் பால்.பிரபாகரன்


ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கொடுத்ததற்காக பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி மற்றும் திரைப்பட இயக்குநர் தோழர் சீமான் ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக இன்று(19.12.2008) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் தோழர் கோ.அ.குமார் தலைமையேற்றார். ஆதித்தமிழர் பேரவை தோழர் இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டதினை தொடங்கிவைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். அவரைத்தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இரா.தமிழரசன், தலித்திய சமூக நீதி உரிமைப் பேரவை தோழர் தவராசு பாண்டியன் , மக்கள் குடியுரிமை ஜனநாயகம் செ.பிரபாகர், மனித உரிமைப்பாதுகாப்பு மய்யம் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் ஆகியோர் தங்களது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

தொடர்ந்து பெரியார் திராவிடர் கழகத்தின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தின் விளக்கவுரையாற்றினார். அவர் உரையாற்றும் பொழுது காங்கிரசு கட்சியின் வரலாற்றினையும் காங்கிரசு கட்சியானது ஆங்கிலேய பெண்மணி ஒருவரால் ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுபட கூறியும் காங்கிரசு கட்சியின் போலி தேசப்பற்றினையும் தமிழின விரோதப்போக்கையும், ஈழத்தில் அமைதி திரும்ப பிரணாப் முகர்ஜியினை விரைவில் அனுப்புவோம் என்று கூறிக்கொண்டு ஈழத்தில் தமிழர்களை அழிக்க சிங்கள இராணுவத்திற்கு ஆலோசனை சொல்ல இந்திய இராணுவ உயரதிகாரிகளை உடனடியாக சிறீலங்காவிற்கு அனுப்பியதைக் கண்டித்தும் காங்கிரசை திருப்திப்படுத்த தமிழின உணர்வாளர்களை கைது செய்யும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியைக் கண்டித்தும் தெளிவுபட தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.













தொடர்ந்து நிறைவுரையாக மக்கள் உரிமைக்குழு வழக்கறிஞர் தோழர் அதிசயக்குமார் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரைக்கண்டித்து வழக்கறிஞர்களாகிய எங்களுக்கே கருத்து சொல்ல உரிமை உண்டா என்று கேள்வி எழுப்பி தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். இறுதியாக பெரியார் திராவிடர் கழக மாநகர துணைத் தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க தலைமைக்கழக உறுப்பினர் தோழர் நெல்லை சி.ஆ.காசிராசன் , தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் வே.பால்ராசு, மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் , மாநகர செயலாளர் தோழர் பால்.அறிவழகன் , தமிழ்நாடு மாணவர் கழக தோழர் வ.அகரன் பெரியார் தி.க. தோழர்கள் ச.கா. பாலசுப்பிரமணியன் , அறிவுபித்தன் , சோசப் , நெல்லை இராசா, நெல்லை ஆறுமுகம் மற்றும் தலித்திய சமூக நீதி உரிமைப்பேரவை , புரட்சிகர இளைஞர் முன்னணி , ஆதித்தமிழர் பேரவை மற்றும் வழக்கறிஞர்களும் திரளாக கலந்துகொண்டனர்.



செய்தி : அகரன்

நிழற்படங்கள் : பாலு நிழற்படக்கலையகம்

No comments: