Tuesday, October 14, 2008

ஈழத்தமிழருக்கு ஆதரவாக திருச்செந்தூரில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகரில் தேரடி திடலில் பெரியார் திராவிடர்கழகத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று(13.10.2008) மாலை 5 மணியளவில் தமிழ்தேசிய பொதுவுடைமைக்கட்சி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தோழர் மு.தமிழ்மணி தலைமையேற்க தோழர் கி.வெங்கட்ராமன்(த.தே.பொ.க) , தோழர் துரை.அரிமா(தமிழர் தேசிய இயக்கம்) , தோழர் மனோகர் ஆகியோர் மற்றும் தோழர் சத்தியா(த.ஒ.வி.இ) ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன உரையினை பதிவு செய்தனர். பின்னர் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் ஆர்ப்பாட்டத்திற்கான விளக்கவுரையினை சிறப்பாக மக்களுக்கு எடுத்துக்கூறினார்.

தோழர் பால்.பிரபாகரன் விளக்கவுரையாற்றும் பொழுது பெய்த கடும்மழையினை பொருட்படுத்தாது தோழர்களும் தமிழின ஆதரவாளர்களும் ஆர்வத்தோடு கேட்டனர். இரவு 7.30 மணியளவில் மழை பெய்துகொண்டிருக்கும் பொழுதே தோழர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கடும் முழக்கமிட்டுக்கொண்டு கலைந்து சென்றனர். நிகழ்வில் இந்நிகழ்வில் பெரியார் திராவிடர்கழக நகரத்தலைவர் தோழர் கோ.அ.குமார் ,மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் சி.அம்புரோசு, பெரியார் தி.க. நகர துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன்,மாவட்ட துணைச்செய்லாளர் தோழர் க.மதன், நகரச்செயலாளர் பால்.அறிவழகன் , மாணவரணி தோழர்கள் வ.அகரன், தோழர் சி.அமிர்தராசு, பெரியார் தி.க.வின் மாவட்ட துணைத்தலைவர் தோழர் வே.பால்ராசு தலைமைக்கழக உறுப்பினர் நெல்லை சி.ஆ.காசிராசன், நெல்லை இராசா, நெல்லை அரியமுத்து . ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள் அருந்ததியரசு, சண்முகவேல் , அ.அன்புசெல்வன் மற்றும் பொதுமக்களும் தமிழின ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

கண்டன முழக்கங்கள் & தீர்மானம்:

இந்திய அரசே சிங்கள அரசுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளாய்! இத் தொகையை சிங்கள அரசு ஆயுதம் வாங்குவதற்குத்தான் பயன்படுத்தும் என்று தெரிந்தே, நிதி கொடுத்தாய்! ஆனால், பொருளாதார முற்றுகையில் சிக்கித் தவிர்க்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு வழங்கத் திரட்டப்பட்ட உணவு,உடை,மருந்துகளை செஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பத் தடை போட்டாய்!

சிங்களப் படைக்குப் போர்க்கப்பல்,நவீனப்படைக்கருவி
கள்,ரேடார் கருவிகள்,வெடி மருந்துகள் வழங்கியதுடன் பயிற்சி அழிக்கவும் 256 படைத்துறையினரையும் அனுப்பி உள்ளாய்!

ஈழத் தமிழர்களைக் கொல்வதற்குத் தானே இவை அனைத்தையும் கொடுத்தாய்!
சிங்களன் உனக்குப் பங்காளி;தமிழன் உனக்குப் பகையாளியா?


இந்திய அரசே.....

1. சிங்கள அரசுக்குக் கொடுத்த படைக்கருவிகள் அனைத்தையும் திருப்பப் பெறு!
2. சிங்களபடைகளுக்குத் துணையாக அனுப்பிய இந்தியப் படைத்துறையிர் அனைவரையும் திருப்ப அழை.
3. இந்தியாவில் எவ்விடத்திலும் சிங்களப் படையினர்களுக்கும்,காவல்துறையினருக்கும் பயிற்சி கொடுக்காதே.
4. நேரடியாகாவோ அல்லது மறைமுகமாகவோ சிங்கள அரசுக்கு அரசியல்,பொருளியல்,படைவகை உதவி எதுவும் செய்யாதே!

செய்தி : அகரன்
நிழற்படம் : பாலு ஸ்டூடியோ

No comments: