Sunday, August 28, 2011

மூவரை காக்க மக்கள் மன்ற பெண் தோழர் செங்கொடி தீக்குளித்து மரணம் [கடிதம் இணைப்பு]

மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.

இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.

முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.

Share/Bookmark

View the Original article

No comments: