Thursday, April 22, 2010

சீமானின் திராவிட எதிர்ப்பும்; சாதி ஆரிய அரவணைப்பும்....

நாம் தமிழர்என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி 18.5.2010 அன்று மதுரையில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கான பரப்புரைகளும், விளம்பரங்களும், அறிக்கைகளும் அவ்வியக்கத் தோழர்களால் முனைப்புடன் பரப்பப்படுகின்றன. அவர்களோடு சேர்ந்து விளம்பரப்படுத்த அல்ல நாம் இதை எழுதுவது! பின் எதற்கு?

விளம்பர அறிக்கை தாங்கி நிற்கும் சில செய்திகளைப் பற்றிய நமது கருத்துகளைத் தெரியப்படுத்த, தெளிவுபடுத்தத்தான் இதை எழுத நேர்ந்தது.

தோழர் சீமான் நமது பெரியார் திராவிடர் கழக மேடைகளில் பெரியாரின் கருத்துகளை சிறப்பாக, அழுத்தமாக பேசி வந்தவர்தான். ஈழ விடுதலையில் அவர் கொண்டுள்ள அக்கறையும், ஆர்வமும் போற்றத்தக்கதுதான். நமது இயக்கத்தோழர்களிடம் நல்லுறவும், இயக்க முன்னணியினரிடம் பெரு மதிப்பும் கொண்டவர்தான்.

ஆனாலும், தங்க ஊசி என்பதற்காக கண்ணைக் குத்தும்போதும் நாம் அமைதியாக இருந்துவிட முடியாது; இருந்துவிடக் கூடாது.

அதுவும் குறிப்பாக அறிஞர்குணாவின் பாதையில் தமிழர் - தமிழரல்லாதவர்’; ‘திராவிடர் - திராவிடம்பற்றி அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற கருத்துக்களை நாம் உரிய வகையில் விளக்கவும், அப்பொய்மைகளை அம்பலப்படுத்தவுமான கடமை நமக்கு உண்டு; நமக்கு மட்டுமே உண்டு. எனவேதான் இதை நாம் எழுதலானோம்.

தமிழர்கள், திராவிடர்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளை நாம் தமிழர் இயக்கம்மேற்கொண்டிருக்கிறது. நல்ல தமிழர்களைஅவர்கள் தேடிக் கிளம்பியிருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் தமிழர் அடையாள ஆராய்ச்சியின்படி ஈழ விடுதலைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் பேருதவி செய்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனைக்கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர் பிறப்பால் மலையாளி என்பதால் திராவிடராகிவிடுகிறார். நான்காவது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில், ஈடில்லாத போராட்டங்களை நடத்திய கோவை இராமகிருட்டிணன், பேராசிரியர் சரசுவதி ஆகியோர்கூட, அவர்கள் கண்களுக்கு நல்ல தமிழர்களாகபுலப்படவில்லை.

ஆங்கிலேயர் கால்டுவெல் கண்டுபிடித்த சொல்லான திராவிடத்தை எப்படி ஏற்க முடியும் என்ற வாதங்களையெல்லாம் முன் வைக்கிறார்கள். கால்டுவெல்என்ற ஆங்கிலேயரின் கண்டுபிடிப்புகளையெல்லாம் ஏற்கக் கூடாது என்று அவர்கள் ஆராய்ச்சிகள் கூறினாலும், சீமான் என்ற வடமொழிப்பெயரை சூட்டிக் கொண்டுள்ளதற்காக அவரை, நாம் தமிழன் இல்லை என்று சொல்லப் போவதில்லை. அவர்களின் ஆராய்ச்சியை சீமானுக்கு நாம் பொருத்திப் பார்க்கத் தயாராக இல்லை.

ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். திராவிடஎன்ற சொல்லை தங்களுடன் இணைத்துக் கொண்டதற்காகவே கலைஞர் கருணாநிதியையோ, விஜய்காந்தையோ, ஜெயலலிதாவையோ நாம் தூக்கி சுமப்பவர்கள் அல்ல.

கலைஞர்கூட ஒரு காலத்தில் அவர் சார்ந்த சமூகப் பார்வையோடு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக திராவிடர் இயக்கத்துக்கு வந்தவர்தான். இன்று அவரிடம் அந்த சமூகப் பார்வை எல்லாம் காணாமல் போய் பெரு முதலாளிகளின் வர்க்கப் பார்வைக்கு வந்துவிட்டார்.

ஜெயலலிதா எப்போதுமே தமிழினத்துக்கு எதிரிதான். இந்த சக்திகள் அரசியல் களத்திலிருந்து ஒதுக்கப்பட்டு, தமிழர்களுக்கான புதிய அரசியல் சக்தி ஏதேனும் தோன்றாதா என்று உண்மையாக ஏங்கும் தமிழர்கள் ஏராளம் உண்டு. விஜய்காந்த் போன்ற குழப்பவாதிகளைவிட சீமான் போன்றவர்கள் அரசியல் களத்துக்கு வரட்டுமே என்ற எண்ண ஓட்டமும் நமக்கு உண்டு.

ஆனால், புதிதாக புறப்பட இருக்கிற நாம் தமிழர்தமிழர்களை ஆரிய எதிர்ப்பாளர்களாக அடையாளப்படுத்திய பெரியாரின் பார்வையைத் தூக்கி எறிந்துவிட்டு, திராவிடர் எதிர்ப்பாளராக அடையாளப் படுத்துவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டது.

பெரியார் முன்னிறுத்திய திராவிடர்என்பது தமிழர்களுக்கான - தமிழர்களை பார்ப்பனிய அடிமைப் பண்பாட்டிலிருந்து மீட்டெடுக்கும் குறிச்சொல் என்ற அடிப்படை உண்மையையே திசை திருப்பி, அது ஏதோ கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலத்தில் வாழும் இனங்களிடம் தமிழர்களை அடிமைப்படுத்துவதாக ஒரு சித்திரத்தை தீட்டிக் காட்ட படாதபாடுபடுகிறார்கள். இதில் அளவில்லாத மகிழ்ச்சி ஆரியத்துக்குத் தான்.

அப்பாடா, நாம் தமிழர் வந்துவிட்டது; இனி நமக்கு ஆபத்தில்லைஎன்று அவாள் கூட்டம், மகிழ்ச்சியில் கூத்தாடக் கூடும். தமிழருக்கு அன்றும் இன்றும் என்றும் கேடானது ஆரியம். அதற்கு அரண் அமைத்துக் கொண்டிருப்பது இந்தியம்; உண்மையில் தமிழர்கள் மீதுசுமத்தப் பட்டுள்ள ஒட்டு மொத்த அடிமைத்தனங்களுக்கும் எதிரான பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்கும் வலிமையான போர்வாள் திராவிடர் - திராவிடம் என்ற லட்சியச் சொல்; ஆனால், நாம் தமிழருக்குஅவைகள் கசக்கின்றன.

தமிழ்நாட்டைத் தவிர, பிற மொழிக்காரர்கள் வேறு எந்த மாநிலத்திலாவது முதல்வரானது உண்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அடக்கத்துடன் நாம் நினைவூட்டுகிறோம். பக்கத்து நாடான கன்னட நாட்டில் தரம்சிங் என்ற மராட்டியர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

நாம் தமிழர்அமைப்புத் தோழர்கள் பலரின் சட்டைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கும் சேகுவேரா கூட அர்ஜென்டினாவில் பிறந்தவர் தான் . அவர் கியுபா விடுதலைக்குப் போராடினார். அத்துடன் நிற்கவில்லை.பொலிவியா விடுதலைக்கும் போராடச் சென்றார். நாம் தமிழர்அமைப்பின் திராவிடர் எதிர்ப்புக் கோட்பாட்டைப் பொருத்திப் பார்க்கும்போது, சேகுவேராவும் கூட கியூபாவின் அன்னியர் தானே?

இனி அவர்கள் பார்வையில் ப. சிதம்பரம், சோழவந்தான் சுப்ரமணியசாமி, புதுவை நாராயணசாமி எல்லாம் திராவிடர் அல்லாத நல்ல தமிழர்களாகி விடக் கூடும்.

இன்னும் விரிவாக எழுதலாம்; திராவிடர் எதிர்ப்பை அவர்கள் தொடரும்போது அதற்கான விளக்கங்களும் பதில்களும் வரத்தானே செய்யும்? அவைகளுக்கெல்லாம் இந்த விளக்கம் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே!

- கொளத்தூர் தா.செ. மணி

தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

http://periyardk.org/

2 comments:

seeprabagaran said...

தோழர் சீமான் அவர்கள் தந்தை பெரியாரையோ அல்லது தமிழினத்திற்காக உழைத்த, தியாகம் செய்த தமிழர் அல்லாதவர்களை எதிர்த்துப் பேசவில்லை என்று கருதுகிறேன்.

திராவிடத்தின் பெயரால் இயங்கிக்கொண்டு தமிழினத்தை சீரழிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே அவர் கருத்து தெரிவித்து இருப்பார் என நினைக்கிறேன்.

தமிழின உணர்வாளர்கள் தங்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகளையோ, கொள்கை முரண்பாடுகளையோ விவாதிப்பதில் தவறில்லை. மாறாக தனிமனித குரோதமாக இது மாறிவிடக்கூடாது.

Tamil Kathaln said...

தோழர்களே ....இங்கே (குவைதில் ) எனக்கும் நாம் தமிழர் தோழர்களுக்கும் இதுவே தர்கமாக உள்ளது .....நமது இயக்கத்தில் இருந்துகொண்டு நாம் தமிழர் அரசியல் கட்சிக்காக பரிந்து பேசுவது தவறா?.....நமது இயக்கம் நாம் தமிழர் இயக்கத்தை ஆதரிக்கிறதா? .......தெளிவுபடுத்துங்கள் தோழர்களே !!!!!!!!!