Monday, September 21, 2009

இலங்கைக்கு சென்ற வேளாண் விஞ்ஞானிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – பெரியார் திகவினர் 30 பேர் கைது

இலங்கை அரசின் வடக்கின் வசந்தத்துக்காக சிறிலங்கா சென்ற வேளாண் விஞ்ஞானிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் உட்பட 30 பேர் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழினத்தினை இலங்கையில் இல்லாதொழிக்கும் வகையிலான சிங்கள அரசின் வடக்கின் வசந்தம் திட்டத்துக்காக இலங்கை சென்றுள்ள தமிழகத்திலுள்ள கோவை வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி முருகேசன் தலைமையிலான குழுவினரைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் கோயம்பத்தூர் வேளாண் பல்கலைக்கழகம் முன்பாக இன்று மாலை 4.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் சிறிலங்கா அரசைக்கண்டித்தும் , வடக்கின் வசந்தம் திட்டத்தினை எதிர்த்தும் , இலங்கை சென்றுள்ள தமிழக விஞ்ஞானிகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன், தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் உட்பட 30 பேர் தமிழக காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


No comments: