Friday, November 28, 2008

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழ்நாடு மாணவர்கழக பொதுக்கூட்டம்

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் தோழர் மருத்துவர் எழிலன் தலைமையில் மாணவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நவம்பர் 27 அன்று மாலை 7 மணியளவில் தூத்துக்குடி 1 ஆம் நுழைவு வாயில் காந்தி சிலை அருகே தமிழ்நாடு மாணவர்கழகம் மற்றும் பெரியார் திராவிடர்கழகம் சார்பில் வாகன பிரச்சாரக்குழுவினருக்கு வரவேற்பு நிகழ்வும் பெரியார் தி.க. மாவட்டத்தலைவர் தோழர் பொறிஞர் அம்புரோசு தலைமையில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவையின் துணைப்பொதுச்செயலாளர் தோழர் க.கண்ணன் , புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் இரா.தமிழரசன், மனித உரிமை பாதுகாப்பு மய்யம் தோழர் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் மற்றும் தலித்திய சமூக நீதி உரிமைப்பேரவையின் தோழர் அ.தவராசுபாண்டியன் ஆகியோர் சிங்கள அரசுக்கெதிராக தங்களது கண்டன உரையை சிறப்பாக பதிவு செய்தார்கள்.

இந்நிகழ்வுக்கு பெரியார் தி.க.வின் மாவட்டத்தலைவர் தோழர் கோ.க.குமார் மற்றும் தோழர் நெல்லை சி.ஆ.காசிராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் பெரியார் தி.க.வின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையாற்றுவதாக இருந்தது தொடர்மழையில் தமிழகம் பெங்களூர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பலநிகழ்ச்சிகளில் பங்கேற்றதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடைசி நேரத்தில் இந்நிகழ்வில் அவரால் பங்கேற்க இயலவில்லை.

சிறப்புரையாக தமிழ்நாடு மாணவர் கழகத்தின் தமிழக பொறுப்பாளரும் தமிழர்க்கு எதிரான இந்து நாளிதழை எரித்து "இந்து நாளிதழ்" அலுவலகத்தினை தாக்கி கைதானவரும் செஞ்சோலை படுகொலையின் பொழுது சிங்கள அரசின் கொடியை எரித்து சிறை சென்றவருமான தோழர் கோவை.ந.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பாக தனது கண்டனவுரையாற்றினார்.

அவரை தொடர்ந்து பெரியார் தி.க.வின் தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் சிறப்புரையாற்றும் பொழுது தூத்துக்குடி பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட துணைச்செயலாளர் தோழர் க.மதன் - தோழர் ரேவதி இணையர் அவர்களின் குழந்தையும் தோழர் க.யாழ் திலீபன் அவர்களின் தம்பிக்கு "பிரபாகரன்" என்று தலைமைக்கழக உறுப்பினர் தோழர் பால்.பிரபாகரன் அவர்கள் பெயர் சூட்டி பிரபாகரன் வாழ்க என்று வாழ்த்தினார். பொதுமக்களும் பிரபாகரன் வாழ்க என்று உணர்வுப்பூர்வமாக முழக்கமிட்டனர்.





தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் மருத்துவர் எழிலன் , தோழர் அன்பு , தோழர் சென்னை அன்பு தனசேகரன் ஆகியோர் சிறப்பாக பெரும் எழுச்சியோடு உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் பெரியார் தி.க. மாவட்ட துணைத்தலைவர் தோழர் சா.த.பிரபாகரன் , மாவட்டதுணைத்தலைவர் வே.பால்ராசு, , தமிழ்நாடு மாணவர்கழக தோழர் வ.அகரன் , பெரியார் தி,க. மாவட்ட துணைசெயலாளர் தோழர் பால்.அறிவழகன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடினை சிறப்பாக செய்தனர். மேலும் இந்நிகழ்வில் ஆழ்வை ஒன்றியச்செயலாளர் நாத்திகம் இ.சேதுஇராமசாமி , பெ.தி.க. மாவட்ட துணைச்செயலாளர் தோழர் செல்லத்துரை , இளையதோழர் பி.யாழ் பிரபாகரன் , தோழர் க.யாழ் திலீபன் மற்றும் பல அமைப்பினரும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

No comments: